எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிப்பு!

IMG 0001
IMG 0001

காணாமல்போன எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியும் வரையில் தமது போராட்டம் தொடரும் எனவும் தமக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத்தரவேண்டும் எனவும் மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிகோரிய சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் பல்வேறு தடைகளையும் தாண்டி 15வது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது.

இன்றைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கபட்டோரின் உறவினர்களும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் அமைப்புகளின் பிரதிநிகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்னர்.

இன்றைய தினமும் காவல்துறையினர் குறித்த பகுதிக்கு வந்து தடையுத்தரவு தொடர்பில் அறிவித்துச்சென்றிருந்த நிலையிலும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாங்கள் பல ஆண்டுகளாக காணாமல்போன எங்களது உறவுகளை தேடிவருகின்றோம், ஆனால் இதுவரையில் இலங்கை அரசாங்கத்தினால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாகவே நாங்கள் சர்வதேசத்தினை நோக்கி எங்களுக்கான கோரிக்கையினை விடுத்துவருகின்றோம்.

எங்களுக்கான நீதியை இந்த நாட்டில் எதிர்பார்க்கமுடியாத நிலையே உள்ளது. இதனால் சர்வதேசம் எங்களுக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.