யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாநகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 262 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 444 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யாழ். வீதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கோப்பாய் சுகாதார மருத்துவ அதகாரி பிரிவில் வசிக்கும் காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் திருத்துனர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மல்லாவி மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இருவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து 395 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்தில் பி சி ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள். கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.