ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பக்தா அல் சிசி ஆகியோரும் தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலானது நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அனைத்து துறைகளிலும், பல்வேறு சர்வதேச அரங்குகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையில் உள்ள எகிப்திய தூதரகம், இந்த சிறந்த உரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறியுள்ளது.
அனைத்து துறைகளிலும், பல்வேறு சர்வதேச அரங்குகளிலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் நாடு கொண்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தி, எகிப்துடனான இலங்கை எப்போதும் கொண்டிருந்த சிறப்பான உறவுகள் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் எகிப்து வகிக்கும் முன்னோடி பாத்திரம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், மத்திய கிழக்கில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை அடைவதிலும் அதன் மதிப்புமிக்க பங்கு ஆகியவையே ஜனாதிபதியின் இந்த பெருமிதத்துக்கு காரணமாகும்.
இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்று இருதரப்பு உறவுகளின் வெளிச்சத்தில், பல்வேறு சர்வதேச அரங்குகளில் இலங்கையுடனான ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எகிப்து வரவேற்கிறது என்று எகிப்து ஜனாதிபதி அல் சிசி இக் கலந்துரையாடலில் உறுதிப்படுத்தினார்.
இந்த அழைப்பின் போது, இரு நாடுகளுக்கிடையில் பன்முக அனுபவங்களை பரிமாறிக்கொள்ளும் முயற்சிகள் விவாதிக்கப்பட்டன, இதில் கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை இரு நாடுகளும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும்.
பயங்கரவாதத்தை உள்நாட்டிலும் பிராந்திய ரீதியிலும் எதிர்த்துப் போராடுவதற்கான எகிப்தின் முயற்சிகளையும், தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளையும் ஜனாதிபதி கோத்தாபய பாராட்டினார்.
இந்த வகையில், தீவிரவாத சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடுவதிலும், இஸ்லாத்தின் அறிவொளி போதனைகளை பரப்புவதிலும் எகிப்தின் அல்-அஸ்ஹார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் முன்னோடி பங்கு குறித்து இதன்போது மேலும் பராட்டப்பட்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.