ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்தின் அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
52 வயதான உப காவல்துறை பரிசோதகர் மற்றும் பாரவூர்தியின் உதவியாளர் ஆகியோர் இந்த விபத்தால் உயிரிழந்துள்ளனர்.
ராஜகிரிய மேம்பாலம் மற்றும் ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதியில் காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பாரவூர்தி ஒன்றை அவர்கள் சோதனை செய்து கொண்டிருந்தவேளையில், பத்தரமுல்லை நோக்கி வேகமாக பயணித்த வேன் குறித்த இருவரையும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பாக வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலவத்துகொடையைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதுபோன்ற விபத்துக்களால் தினசரி சுமார் பத்து பேர் உயிர் இழப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.