ஈஸ்டர் ஞாயிறு வெடிப்பிற்கு பயங்கரவாதிகளால் பரவலாக பயன்படுத்தப்படும் யூரியா நைட்ரேட் எனப்படும் சக்திவாய்ந்த வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அரசு ஆய்வாளர் கே.ஏ.வலியங்கே தெரிவித்துள்ளார்.
யூரியா நைட்ரேட் ஒரு சக்திவாய்ந்த வெடிபொருள் ஆகும். இது இஸ்ரேலிய அரங்கில் பயங்கரவாதிகளால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது பெப்ரவரி 1993 இல் நியூயோர்க்கில் நடந்த உலக வர்த்தக மைய குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெடிப்புக்குப் பின்னரான விசாரணைகள் தொடர்பான அறிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் குண்டுவெடிப்பு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்போம் என்று நம்புகிறோம் என அரசு ஆய்வாளர் கே.ஏ.வலியங்கே மேலும் கூறியுள்ளார்.
சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசியத் தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்கள் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ஹோட்டல்களை குறிவைத்து பல குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 260 பேர் இறந்ததுடன் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.