கொலன்னாவையில் சஜித்தின் முதலாவது நிகழ்வு

5 sajith 2
5 sajith 2

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தேர்தலுக்குப் பின்னர் முதல் தடவையாக கட்சி நடவடிக்கைகளை எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு கொலன்னாவையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் சஜித் பிரேமதாச பங்கேற்று உரையாற்றவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவான முறுகல் காரணமாக ஒதுங்கி இருந்த சஜித் பிரேமதாச கட்சி நிருவாக மாற்றத்தை வலியுறுத்திவந்தார். கட்சித் தலைமைத்துவத்தையும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் தனக்குத் தர வேண்டுமென்று கோரி வந்தார்.

இந் நிலையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் சஜித்தை எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரேரிக்கப்பட்டதையடுத்து முறுகல் நிலையில் தளர்வு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நிருவாக மாற்றம் தொடர்பில் தீர்மானிக்க கட்சி முடிவெடுத்திருக்கும் நிலையில் பொதுத் தேர்தலின் போது சஜித்தை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.