வடமாகாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

covid update 2
covid update 2

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 8 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 761 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 16 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நாவாந்துறையைச் சேர்ந்தவர்.

யாழ்ப்பாண உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் பாற்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள். மற்றொருவர் யாழ்ப்பாண மாநகரில் வங்கி ஒன்றில் பணியாற்றும் கொக்குவிலில் வசிப்பவர்.

வவுனியா பொது வைத்தியசாலை விடுதி ஒன்றில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 71 வயதுடைய முதியவர் நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் வசிப்பவர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.