மட்டக்களப்பிற்கு ஒதுக்கப்பட்ட ஆஞ்சியோகிராம் கருவி எங்கே? – சாணக்கியன்

Shanakiyan MP
Shanakiyan MP

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கான இதய வடிவகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம் கருவியினை களுத்துறை மாவட்டத்திற்கு எப்படி ஒதுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுகாதார அமைச்சரினை சில காலங்களுக்கு முன் சந்தித்த வேளை பிரதமருக்கு முன்னால் கொடுப்பதாக உறுதிபடுத்தப்பட்டு கூறப்பட்ட நிலையில், இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை.

அத்தோடு, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு வருகைத் தந்தபோது, உடனிருந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர், தனது மாவட்டத்தில் கெத் லெப் அமைக்கப்படும் என்றும் எதிர்க்காலத்தில் எமது மாவட்டத்திற்கு இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில், குறித்த ஆய்வகம் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க முடியுமா என கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு, களுத்துறைக்கு மாற்றப்பட இருப்பதாக அறியக்கிடைக்கின்றது. ஆனால் அங்கிருந்து கொழும்புக்கான பயண தூரம் ஒரு மணித்தியாலங்களே ஆனால் மட்டக்களப்புக்கு கிடைக்குமானால் பயனடையப்போவது கிழக்கு மாகாணம் முழுவதுமே.

மட்டக்களப்பு அல்லது திருகோணமலையில் உள்ள ஒரு நோயாளி, குறித்த சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவதற்காக கொழும்புக்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ 8 மணிநேரம் செலவழித்து பயணம் செய்ய வேண்டியுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பில் காணப்படும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை சம்பந்தமாகவும் சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், மட்டக்களப்புக்கு கொண்டுவர இருந்த நிலைமையில் அங்கு காணப்பட்ட தொழில்நுட்ப பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக களுத்துறையில் அவ் பிரதேசத்தை சேர்ந்த பிரதேசவாதிகளினால் கட்டுவிக்கப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றுவதாக முடிவெடுக்கப்பட்டது என்று கூறினார்.

அடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டக்களப்பிற்கு வழங்குவதாகவும் கூறினார். இது சம்பந்தமாக தான் விபரமான அறிக்கை ஒன்றை தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வைத்திய ஆளணி பற்றாக்குறை சம்பந்தமாக கருத்து தெரிவித்த அவர் ‘‘ஒட்டுமொத்த நாட்டிலும் வைத்தியர்களின் பற்றாக்குறைக் தொடர்ந்தும் காணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

வடக்கு- கிழக்கில் சேவையாற்றும் வைத்தியர்கள், விசேடமாக பெண் வைத்தியர்கள், கடமையில் இணைந்து இரண்டு மூன்று மாதங்களிலேயே கர்ப்பகால விடுமுறையை எடுக்கிறார்கள்.

பின்னர் இரண்டு வருடங்களிலேயே வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதனாலேயே பற்றாக்குறை நிலவுவதாக கூறினார்.

இந்நிலையில் முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்னரே தீர்மானிக்கப்பட படி மட்டக்களப்பிற்கு வழங்கிவிட்டு அடுத்த ஒப்பந்தத்தின் மூலம் களுத்துறைக்கு வழங்குமாறு சாணக்கியன் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.