நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க

Ranjan Ramanayake
Ranjan Ramanayake

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர், நாடாமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை இரத்து செய்வதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டார்.

அதன்படி, அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி, கம்பஹா தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் ஒரு வெற்றிடம் உள்ளதாக அறிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 12 ஆம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தனது நாடாளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் குறித்த ரீட் மனுவை கடந்த 5ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.