138 கிராம அலுவலர் பிரிவுகள் கொரோனாவால் முடக்க நிலை – இராணுவத் தளபதி தகவல்

இலங்கையில் ஏப்ரல் மாத புது வருடத்தைத் தொடர்ந்து தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலின் 3ஆம் அலையைத் தொடர்ந்து, இதுவரை நாட்டின் 14 மாவட்டங்களில் உள்ள 138 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில் உள்ளன என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார்.

கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் 21 கிராம அலுவலர் பிரிவுகள் புதிதாக முடக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின், குளியாப்பிட்டி காவற்துறை பிரிவில் 19 கிராம அலுவலர் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய இடங்கள் முடக்க நிலையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.