வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தொடக்கம் ஆரம்பித்த நிலையில் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையொப்பமிட்டுள்ளனர்.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாளை கையளிக்கப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரின் கூற்றின்படி அமைச்சரவையின் அனுமதியின்றி வலுசக்தி அமைச்சர் தன்னிச்சையாக எரிபொருட்களின் விலையை அதிகரித்தமை, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியமை உட்பட 10 காரணங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என்பனவும் ஆதரவு வழங்கவுள்ளன என்று தெரியவருகின்றது. அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள பஸில் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்காவிட்டாலும் நடுநிலை வகிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.