வவுனியா இறம்பைக்குளம் மற்றும் பட்டாணிச்சூர் பகுதிகளில் வயற்காணிகளில் மண்நிரப்பும் செயற்பாடுகள் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் உள்ள வயற்காணியில் கடந்த சிலதினங்களாக டிப்பர்களை கொண்டு மண் நிரவப்பட்டு வந்தது. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய குறித்த பகுதிக்கு இன்று சென்ற மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ். விஸ்ணுதாசன் தலமையிலான குழுவினர் குறித்த செயற்பாட்டினை தடுத்து நிறுத்தியதுடன்,கொட்டப்பட்ட மண்ணினை அகற்றுமாறும் உத்தரவிட்டனர்.
இதேவேளை பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கட்டளையினை உதாசீனம் செய்து வயற்காணியில் கட்டுமானங்களை மேற்கொண்ட 3 நபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.