மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைவஸ்து வியாபாரம் செய்து வருவர் ஒருவரின் வீட்டை விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு முற்றுகையிட்டு 14 கிராம் 75 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருள், குளிசைகள், கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் பொதி செய்யும் இயந்திரம் 3 ஆயிரம் ரூபா பணத்துடன் 3 பேரை கைது செய்ததுடன் பிரதான வியாபாரி அவரது தாயார் தப்பியோடியுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் நகர்பகுதியிலுள்ள லொயிஸ் அவனியூர் வீதியிலுள்ள குறித்த வீட்டை சம்பவதினமான இரவு 8 மணிக்கு முற்றுகையிட்டபோது பிரதான போதை பொருள் வியாபாரியும் அவரது தாயாரும் அங்கிருந்து தப்பியோடிய நிலையல் அங்கிருந்து 14 கிராம் 75 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருள், ஒரு கிராம் கஞ்சா 14 குளிசைகள், 3 ஆயிரம் ரூபா பணத்துடன் 3 இளைஞர்களை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தரை வரவழைத்து வீட்டை இரவு 11 மணிவரை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜஸ் போதைப் பொருள், போதைப்பொருள் பொதி செய்யும் இயந்திரம், நிறுக்கும் தராசு மற்றும் போதை பொருள் யார் யாருக்கு விற்பனை செய்தது அவர்களிடம் வாங்கிய பணம் வங்கியில் பணம் அனுப்பியது வைப்பிலிட்டது போன்ற தரவுகள் எழுதப்பட்ட கொப்பி உட்பட பல உபகரணங்களை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரிடம் விசேட அதிரப்படையினர் ஒப்படைத்ததுள்ளளர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை தப்பி ஓடிய பிரதான போதைப்பொருள் வியாபாரி மட்டக்களப்பு கொழும்பு தனியார் பஸ்வண்டியில் நடத்துனராக கடமையாற்றி வந்துள்ளதாகவும் இவருடன் இவரது தாயாரும் இணைந்து இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.