மேல் மாகாண சுகாதார சேவை சாரதிகள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
மேல் மாகாண போக்குவரத்து மற்றும் நோயாளர் காவுவண்டிகள் சங்கத்தின் தலைவர் பிரதீப் நிஷாந்த, இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வேதனம் மற்றும் விடுமுறை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மூன்று நாட்களுக்கு இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகத்தர்கள், மூன்று நாட்கள் மாத்திரம் பணியாற்ற வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் தாங்கள் மாதத்தில் 30 நாட்களும் பணியாற்ற வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 முதல் 15, 20 மணித்தியாலங்களாக, நோயாளர் காவு வண்டியில் சுகாதார பாதுகாப்பு உடைகளுடன் தாங்கள் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் தலையீடு செய்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் எனத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.