ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

UN
UN

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்த கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைவான பொறுப்புக்கூறலில் இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வியெழுப்படலாம். மேலும் நிலையான பொறிமுறையொன்றின் கீழ் இலங்கையை கண்காணிக்கும் யோசனையை சிறப்பு அந்தஸ்துள்ள அமைப்புகள் கூட்டத்தொடரில் வலியுறுத்தவும் உள்ளன.

அதேபோன்று இந்த கூட்டத்தொடரின் போது சவேந்திர சில்வாவின் நியமனம் உள்ளிட்ட இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் எட்டுப்பேர் கொண்ட நிபுணர் குழுவின் கூட்டறிக்கை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளன.

உறுதிமொழிகளுக்கு அமைவான பாதுகாப்புத்துறைசார் மறுசீரமைப்புக்களை இலங்கை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் துரித விசாரணைகளையும் இந்த குழு வலியுறுத்தியுள்ளது.

உண்மை , நீதி , இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான விஷேட அறிக்கையாளர் பாபின் சல்வியோலி, வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான ஐ.நா செயற்குழு உறுப்பினர்களான பேர்னாட் துஹெய்மி , தா ஹூங்கா பாய்க், கூறியா எஸ் சிலோமி, யூசியானோ கசன், கென்ரிகாஸ் மைக்கெவிசியஸ், சட்டத்துக்கு முரணான படுகொலைகள் தொடர்பான விஷேட அறிக்கையாளர் ஹெக்னேஸ், கோலாமாட் , சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு எதிரான விஷேட நிபுணர் நீல்ஸ் உள்ளிட்டவர்களே இவ்வாறு இலங்கை குறித்து கூட்டறிக்கையினை வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்ற கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து பிரதான நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட வில்லை. ஆனால் கூட்டதொடரின் பக்க கலந்துரையாடல்களின் போது இலங்கை குறித்து சர்தேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட ஐ.நாவில் நிரந்தர சிறப்பு அந்தஸ்துள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.