பொறுமை இழந்த சஜித் ஆவேச கத்தல்

download 14
download 14

இரட்டை கொம்புடன் கூடிய கிரீடத்தை என் தலையில் சூட்டப்பார்ப்பதாகவும், அதனை ஏற்பதற்கு தான் ஒரு முட்டாள் அல்ல என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

என்னை பிரதமர் வேட்பாளர் எனக் கூறிவிட்டு கட்சித் தலைமைத்துவத்தை மற்றொருவரிடம் ஒப்படைத்து என்னை அதிகாரமில்லாத வாய்பேசாத பொம்மையாக வைக்கப்பார்க்கின்றனர். அதற்கு நான் ஒருபோதும் இணங்கமாட்டேன்.

கட்சித் தலைமைத்துவத்தை சட்ட ரீதியாக கையளித்தால் மட்டுமே நான் அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவேன். அதிகாரமில்லாத பதவிகள் எதுவும் எனக்குத் தேவை இல்லை.

பொதுத் தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் போது ஐ.தே.கவின் தலைமைப்பதவியில் நான் இருந்தால் மட்டுமே பிரதமர் வேட்பாளராக களமிறங்குவேன். அப்படி நடக்காதுவிட்டால் அதிகாரமில்லாத பதவிகள் எதனையுமே ஏற்கப்போவதில்லை.

தேர்தலை கட்சி பொறுப்புடன் எதிர்கொள்ள வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். வேட்பாளர் தெரிவு விடயத்தில் விருப்பு, வெறுப்புகள் காட்டப்படக்கூடாது. கட்சி யாப்புக்கமைய செயற்பட வேண்டியதை நான் மறுக்கவில்லை.

யாப்புப்படி நிருவாகம் தெரிவுசெய்யப்பட வேண்டும். அதற்கு செயற்குழு கூட்டப்பட வேண்டும். செயற்குழுவை உடன் கூட்டுமாறு கட்சியில் முக்கிய பலரும் கோரிக்கை விடுத்த போதும் அது இதுவரை நடக்கவில்லை. எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் செயற்குழுவின் இவ்வாண்டுக்கான பதவிக்காலம் முடிவடைகின்றது என்பதை மறந்துவிடக்கூடாது

நான் பொறுமையுடன் தான் இருக்கின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் கட்சியை பிளவுபடுத்த எவருடனும் துணை போகமாட்டேன். எனக்கு வாக்களித்த 55 இலட்சம் மக்களுக்கு பொறுப்புடையவனாக இருக்கவே உறுதிபூண்டிருக்கின்றேன். இதனை கட்சி உயர்மட்டம் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்சியில் ஒருவரைத் தலைவராக்கிவிட்டு என்னை பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டால் அதனை அர்த்தமற்றதாகவே கருதுகின்றேன். மற்றொரு தடவை கண்களை மூடிக்கொண்டு பயணித்து தலையை முட்டிக்கொள்ள தான் விரும்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தங்களை பிரதமர் வேட்பாளரென பிரசாரப்படுத்தி வருகின்றது. அதனை நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா எனக் கேட்டபோதே சஜித் பிரேமதாச எம்.பி. தனது நிலைப்பாட்டை இவ்வாறு விளக்கியுள்ளார்.