குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இம்மனு மீது இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே ராஜித்த சேனாரத்ன தாக்கல் செய்த முதல் முன் பிணை கோரிய மனுவானது, தான் கைது செய்யப்படப்போவது எந்த சட்டப் பிரிவின் கீழ், எந்த குற்றத்துக்காக என்பதை குறித்த மனுவிலோ அல்லது முன்வைக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியிலோ மனுதாரர் தெரிவிக்காத நிலையில், அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது எனக்கூறி கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜெயரத்ன கடந்த வெள்ளியன்று மனுவை நிராகரித்திருந்தார்.
இந் நிலையில் அன்றைய தினம் மாலை மீள, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு முன் பிணைக் கோரி இரண்டாவது தடவையாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னர் முன்வைத்த மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து , 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்டத்தின் 21 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக, முன்னைய மனுவில் இருந்த வழுக்களை திருத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் திருத்தி மீள தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் பிணை மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.