இரணைதீவு பாடசாலையினை புனரமைக்க கடற்படை தடை

07 1
07 1

கிளிநொச்சி  பூநகரி கோட்டத்திற்குட்பட்ட  இரணைத்தீவு பாடசாலையினை புனரமைக்கும் பொருட்டு ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக  சென்ற குழுவினரை கடற்படை   அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இது  தொடர்பில் தொியவருவதாவது, இரணைத்தீவு மக்கள் கடந்த 1992 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து  இரணைமாதாநகரில் வசித்து வந்த நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2018 இல் 366 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் இரணைத்தீவில்  மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.

மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட மக்கள் அன்று தொடக்கம்  பல்வேறு அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்  தற்போது அங்குள்ள கிளி. இரணைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் புனரமைக்க நடவடிக்கைக்கு நிதி 7.4 மில்லியன்  ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

14.07.2021 இல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 12.10.2021 இல் நிறைவு பெறும் வகையில்  புனரமைப்பு பணிகளை  மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (16.07.2021)  குறித்த பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப் பணிமனையின் தொழிநுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட குழுவினர்  இரணைத்தீவுக்கு செல்வதற்காக இரணைமாதாநகர் கடற்கரைக்குச் சென்ற போது  அங்கிருந்த கடற்படையினர் அவர்களை  திருப்பி அனுப்பியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு அனுமதியின்றி  இரணைத்தீவுக்கு அனுமதிக்க முடியாது என கடற்படையினர் தெரிவித்ததாகவும். ஆனால் சுமார் 150 குடும்பங்கள் வரை  இரணைத்தீவில் வசித்து வருகின்றனர்.   

ஏனைய மக்களும் மீள குடியேறுவதற்கு பாடசாலை மிக மிக முக்கியமானது என்பதனால் சேதமுற்றுள்ள பாடசாலையினை புனரமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கே கடற்படையினர் அனுமதி மறுத்துள்ளனர் என பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்