பட்டிருப்புத் தொகுதியின் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பூபாலபிள்ளை கணேசலிங்கம் அவர்கள் இத்தொகுதியில் உள்ள மக்களுக்கு அவர் ஆற்றிய அளப்பெரும் மக்கள் சேவைக்காக அம்மக்களால் அவர் பிறந்த ஊரான பெரியகல்லாற்றில் அவரின் உருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பெரியகல்லாற்றின் ம.தெ.எ.பற்று பிரதேசசபைக்குச் சொந்தமான நூலக கட்டட வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ம.தெ.எ.பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ். கணேசன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அமரர் பூபாளபிள்ளை கணேசலிங்கம் அவர்களுக்கு சிலை நிர்மாணிப்பதாக குறிப்பிட்டதைப் போன்று அதற்கான சகல வேலைகளையும் முன்னின்று செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சிலை நிர்மாணிப்பு பணி முடிவுற்றதும் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் அங்குராப்பணம் நிகழ்வு நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. சங்காரவேல் பௌண்டேஷன் அமைப்பின் பொருளாளர் ந.குபேந்திரராஜா தெரிவிக்கையில் இச்சிலை அங்குராப்பண நிகழ்வுக்கு அமரர் பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் புதல்வர்களில் ஒருவரான அவுஸ்ரேலியாவில் வசிக்கும் முகுந்தன் கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொள்வார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.