நீங்கள் வாள் எடுத்தால் நாம் கேடயம் தூக்க வேண்டி வரும்

sivajilingam
sivajilingam

தமிழர்கள் மீதான இனவாத போக்கினை கைவிட வேண்டும் எனவும் நீங்கள் துட்டகைமுனுவின் வாள் எடுத்து வீசினால் நாங்கள் சங்கிலியன், எல்லாளன், பண்டாவன்னியன் போன்றவர்களின் கேடயங்களை எடுத்து தற்காப்பு செய்வோம் எனவும் அப்போதும் நீங்கள் நிறுத்தாமல் இந்தநிலைமைகள் தொடர்ந்தால் நாங்கள் அவர்களின் வாள்களை எடுப்பதற்கும் நாங்கள் தயங்கமாட்டோம் என தமிழ்த் தேசியகட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வாள் கொண்டு விரட்டியடிப்போம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறிய விடயம் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலைப் போராட்டத்தை மௌனித்ததென்று அறிவித்ததன் பின்னர், தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் போருக்கு அழைக்க வேண்டாம்.

நீங்கள் வாள் எடுத்தால், நாங்கள் எல்லாளன், சங்கிலிய மன்னனின் கேடயங்களை எடுக்க வேண்டி வரும். அதையும் மீறி நீங்கள் தாக்குதலை தொடருவீர்களாக இருந்தால், நாங்களும், பண்டாரவன்னியன், சங்கிலிய மன்னன், எல்லாள மன்னனுடைய வாள்களை எடுக்கத் தயங்கமாட்டோம். அந்த நிலமைக்கு தயவு செய்து எங்களைத் தள்ளாதீர்கள்.

இனிமேலும் இந்த நாட்டில் இரத்தககளரி வேண்டாம். எமக்கான தீர்வு வழங்கப்படாமையின் காரணமாக நாட்டில் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டதாகவும் எனவே மீண்டும் ஒருமுறை இவ்வாறான பிரச்சினை ஏற்படா வண்ணம் எமக்கான
சமஸ்டியைப் பெற்று, எமது மக்கள் நின்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.