முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் புதுமாத்தளன் பகுதியில் நான்கு உரப்பைகளில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பாரிய அளவிலான கேரள கஞ்சா இன்று மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று பிற்பகல் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பாரிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வாளர்களின் தகவல் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் குறித்த பொதிகளை மீட்டுள்ளனர்.
அளவீட்டு பணிகளை தொடர்ந்து மேலதிக நடவடிக்கைக்காக முல்லைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு உரப்பைகளில் இருந்து 72 பொதிகள் காணப்படுவதோடு அண்ணளவாக 150 கிலோகிராம் நிறை இருக்கும் என தெரியவருகிறது.