நாடாளுமன்ற அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலேயே சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுகிறார் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனவரி 3ஆம் திகதி, நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது. நாடாளுமன்றில் எல்லாம் மாறிவிட்டாலும் சபாநாயகர் பதவி மட்டும் அவ்வாறே காணப்படுகிறது.
பிரதமர், ஜனாதிபதி என அனைவரும் மாறிவிட்டார்கள். இந்த நிலையில், நாம் இந்த சபாநாயகரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
ஜனாதிபதித் தேர்தலினூடாக எமக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அதாவது, புதியவர்கள் வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள்.
எனினும், சபாநாயகர் கருஜெயசூரிய, தொடர்ந்தும் சபாநாயகராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுள் ஒருவராவார்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றே அவர் விரும்புகிறார்.
இதற்கு நாம் என்றும் இடமளிக்க முடியாது. அவர் செய்வது தவறு என இந்த நாட்டின் மக்களும் உணர்வார்கள்” என தெரிவித்தார்.