தமிழர்களின் நிலைக்கு தமிழரசு கட்சியே காரணம்- சங்கரி குற்றச்சாட்டு

sangari
sangari

வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழரசுக்கட்சியே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது ஓரளவு நிம்மதியாக வாழவிடுங்கள்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம் தமிழரசுக்கட்சியே!

நிலைமை இவ்வாறிருக்கும் போது வடக்கு, கிழக்குக்கு வெளியே தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தயவுசெய்து அவர்களையாவது நிம்மதியாக வாழவிடுங்கள்.

ஏதோ ஓரளவு வறுமையான வாழ்விலும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் செம்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். அதுமட்டுமல்ல பல வருடங்களாக அரும்பாடுபட்டு உருவாக்கிய பல தொழிற்சங்கங்கள் இன்றும் அங்கு பலமாகவே இருக்கின்றன.

காலத்திற்குக் காலம் மாறி மாறி வரும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மூலம் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுத் தங்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்கள்.

அங்குள்ள தலைவர்கள் அந்த மக்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும் பூர்த்திசெய்வார்கள்.

28 வருடங்களாக இயங்காமலிருந்த தமிழரசுக் கட்சியை தூசுதட்டி ஒருசிலரின் பதவி மோகங்களுக்காக விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் சாதித்தது என்ன?

இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதேபோல சர்வதேசமே பார்த்து வியந்துபோன விடுதலைப் புலிகள் அமைப்பு அழிந்துபோன போதும் அமைதியாக வேடிக்கைபார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் போரில் மக்களின் வாழ்வும், சொத்துக்களும் நாசமாகிய போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் பலமான விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டது நல்ல விடயம் என்று இப்போதுதான் திருவாளர் சம்பந்தன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

தந்தை செல்வா அவர்கள் 1949ல் உருவாக்கிய தமிழரசுக்கட்சி வேறு. இப்போதுள்ள தமிழரசுக் கட்சிவேறு. 1972ல் தந்தை செல்வா அவர்கள் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துடனும் மலையகத் தலைவர் அமரர்.சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடனும் இணைந்து தலைமையைப் பகிர்ந்துகொண்ட கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணி.

இந்த நிலையில் இன்றுள்ள தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டால் ஆமை புகுந்த வீடாகி விடக்கூடாது.

நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றவர்கள் யாரேனும் ஒரு அரசியல் கைதியையாவது விடுதலை செய்ய முற்பட்டார்களா?

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களை கை, கால்கள் சேதமடையாமல், துப்பாக்கிக் குண்டுகளுக்கும் இரையாகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கா விட்டாலே போதும்.

தமிழரசுக் கட்சி தன் இருப்பைத் தக்கவைக்க
அந்த அப்பாவி மக்களை பகடைக் காய்களாக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டார்.