கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் தேர்தல்களில்
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உப தலைவர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த மாதம் இடம்பெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி கூட்டத்தில் மத்திய குழு தெளிவாக தீர்மானம் எடுத்தது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கியத்துக்கு தடையாக இருந்து விடக்கூடாது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க வைப்பதும் கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கும் எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமைப்பட்டால் மட்டும்தான் அது முடியும்.
எனவே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை பொறுத்தளவில் எந்த சந்தர்ப்பத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுடைய வாக்குகளை பிரிப்பதற்கு உறுதுணையாக நிற்காது.
அதேவேளை தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கான தயார் நிலையில் இருக்கின்றோம்” என தெரிவித்தார்.