இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜூநாத் சிங் ஆகியோருக்கான சந்திப்பு நேற்றைய தினம் இந்திய பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அச்சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட ஒத்துழைப்பை மீளாய்வு செய்வது தொடர்பில் உயர்ஸ்தானிகரும், பாதுகாப்பு அமைச்சரும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டார்கள்.
இலங்கை கடற்பரப்பில் நியூடய்மன் மற்றும் எக்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளானபோது தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கும், சமுத்திர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவம், கடற்படைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. கொழும்பில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு மாநாடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.