இலங்கைக்கான லொட் பொலிஷ் எயார்லைன்ஸின் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வு

nithya 7
nithya 7

இலங்கை மற்றும் போலந்துக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் நோக்கில் அரசியல், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா உறவுகள் மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற போலந்து தூதுவர் அடம் புராகோவ்ஸ்கி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கான லொட் பொலிஷ் எயார்லைன்ஸின் நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு, தூதுவர் புரகோவ்ஸ்கி கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார். 

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டுடன் 65 வருடங்கள் நிறைவடையுள்ளமையை நினைவு கூர்ந்த  அமைச்சர், போலந்துடனான பன்முகப் பங்காளித்துவத்தை மேலும் முன்னேற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

இதன்போது இரு நாடுகளினதும் வணிக சபைகளுக்கு இடையேயான வழக்கமான தொடர்புகளின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையின் முக்கியத்துவத்தின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றிய – இலங்கை  ஒத்துழைப்பு குறித்து அமைச்சர், தூதுவருக்கு விளக்கமளித்தார்.

போலந்தின் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் இருவழி சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக 2022 இல் இலங்கையில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஒரு நிகழ்வு குறித்தும் தூதுவர் தெரிவித்தார்.