முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றிய எம்.முபாரக் அவர்கள் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை நிர்வாக சேவையின் முதற்தரத்தினைச் சேர்ந்த எம்.முபாரக் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாமணி பட்டத்தையும், பொதுநிர்வாக துறையில் முதுகலைமாணி பட்டத்தையும் பூர்த்தி செய்தவராவார்.
1995 இல் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கலாசாலையில் ஆசிரியர் சேவை பயிற்சியை நிறைவு செய்து 1996.10.01ம் திகதி தொடக்கம் ஆசிரியராக அரச சேவையில் காலடி எடுத்து வைத்த இவர் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 2003இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டதையடுத்து சேருவில் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக 2004-2005 வரையான காலப்பகுதியில் கடமையாற்றினார்.
தொடர்ந்து 2005இல் கிண்ணியா பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகவும் பின் 2005.12.16ம் திகதி தொடக்கம் அங்கு பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார்.
தொடர்ந்து2011ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளராக கடமையாற்றினார்.
2013ம் ஆண்டு தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர்(நிர்வாகம்) கடமையாற்றிய காலப்பகுதியில் இலங்கை நிர்வாக சேவையின் தரம் ஒன்றை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து 2014ம் ஆண்டு தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில் தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றினார்.மேலும் 2016ம் ஆண்டு தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியில் கொரவப்பத்தானை பிரதேச செயலாளராகவும், தொடர்ந்து 2021ம் ஆண்டு வரை மூதூர் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார்.
2021ம் ஆண்டு தொடக்கம் 05.12.2021வரையான காலப்பகுதியில் கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றியுள்ள எம்.முபாரக் அவர்கள் கடந்த 06.12.2021ம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.