வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் நிதியில் பாரிய வீழ்ச்சி!

central bank
central bank

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள், அனுப்பி வைக்கும் நிதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த மாதம் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 55.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி ஆண்டின் முதல் 11 மாதங்களில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மொத்தமாக 5166.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இதே காலப்பகுதியில் 2020 ஆம் ஆண்டில் 6291.2 அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாகக் கிடைத்திருந்தது.

இது முழு ஆண்டு தொகையுடன் ஒப்பிடுகையில் 17.9 சதவீத வீழ்ச்சி எனவும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் நிதியினை அனுப்பும்போது வழமையான வங்கி நடைமுறையினை பின்பற்றுமாறு மத்திய வங்கி அண்மையில் வலியுறுத்தி இருந்தது.

தெரிந்தோ தெரியாமலோ வேறு விதமாகப் பணம் அனுப்புவது குற்றச்செயலாகக் கருதப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.