புதிய பிறழ்வுகள் தொடர்பில் மிகுந்த அவதானத்தில் சுகாதார தரப்பு!

hemantha
hemantha

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளிடம் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் சந்தேகத்திற்கிடமான மாதிரிகளை, ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த செயற்பாட்டின் ஊடாக நாட்டிற்குள் புதிய பிறழ்வுகள் நுழைகின்றனவா என்பது தொடர்பில் சுகாதார தரப்பினர் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது மூன்றாம் கட்ட தடுப்பூசியாக பைசர் மாத்திரமே வழங்கப்படுகிறது. ஏனைய தடுப்பூசிகளை வழங்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் அவசர தேவைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளையும் ஒரே வகையில் எண்ணுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது. காரணம் தற்போது சில நாடுகளில் ஒரு சில தடுப்பூசிகள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகவுள்ளன.

சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அவை அனைத்தும் 100 வீதம் சாத்தியமானவை என்று கூற முடியாது. எனவே தான் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் , தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் என்பன தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி அட்டையை பொது இடங்களுக்கு கொண்டு செல்வதை கட்டாயமாக்குவது தொடர்பான இறுதி தீர்மானம் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. இவ்விடயத்தில் சகல தரப்பினருக்கும் நியாயம் கிடைக்கு வகையிலான தீர்மானமே எடுக்கப்பட வேண்டும்.