யாழ்ப்பாணம் – மிருசுவில் தொடருந்து கடவையில், தொடருந்தில் மோதுண்டு கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில், மிருசுவில் தொடருந்து கடவையால் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது குறித்த கெப் ரக வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் பலியானதாக காவல்துறை முன்னதாக தெரிவித்திருந்தது.
எவ்வாறிருப்பினும், காவல்துறையிடமிருந்து பிந்திக் கிடைத்த தகவலின்படி, 12 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாகவும், அவரின் தந்தையும், சகோதரனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (12) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தந்தை (45) மற்றும் உயிரிழந்தவரின் சகோதரன் (15) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்