சமஸ்டி மற்றும் தனிநாடு கோரிய தமிழர்கள் இன்று இலங்கையின் மொழியாக தமிழை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டதாக கவலை தெரிவித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இந்த நிலைமைக்கு தமிழ்த் தலைமைகளே காரணம் என ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த மனோ கணேசன் அவர்கள் “எல்லா உலக வல்லரசுகளும், உள்நாட்டு அரசுகளும் தமிழர்களை பயன்படுத்தி தமது இலக்குகளை அடைந்து விட்டன. பாமர தமிழர் நிலைமை அப்படியேதான்! தமிழர்களை வழி நடத்திய இலங்கையின் தமிழ் அரசியல் தலைமைகள் தோற்று போய் விட்டன” என முகநூல் பதிவொன்றில் தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார்.
“புதிய சவால்களை, புதிய கோணத்தில் பார்த்து, புதிதாய் சிந்தித்து, புதிய இரத்தம் பாய்ச்சி செயற்பட வேண்டிய தருணம் இது! இதை 2020-புத்தாண்டின் திடசங்கற்பமாக கொள்வோம்!” என மேலும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.