வட கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளால் தெற்கு தோற்கடிப்பு

IMG 0161 resized 6
IMG 0161 resized 6

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், வட கிழக்கில் தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்றைய நாள்(4) இடம்பெற்ற தமிழ் அரசு கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரைரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை ஏற்று செயற்படுவதனாலேயே இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

எப்போதும் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுக் கொண்டேயிருக்கும், இக்கட்சியை எப்போதும் வீழ்த்தவே முடியாது.

அத்தோடு கடந்த அரச தலைவர் தேர்தலில் வடகிழக்கில் தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருக்கின்றன.

தமிழர்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களை மறந்துவிடவில்லை,
குறிப்பாக இளைய சமூகம் கூட கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களயும், கடந்த காலங்களில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினையும் மறந்து விடவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்து, நடாத்திய கொத்துக்குண்டு, பல்குழல் செல் தாக்குதல்கள், அவர்களுடைய காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் எவற்றையும் எமது மக்கள் மறந்துவிடவில்லை. அதனையே கடந்த அரச தலைவர் தேர்தல் உணர்த்தியுள்ளது.

எனவே எமது தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிட்டும்வரையில் தொடர்ந்தும் போராடுவோம்” என தெரிவித்தார்.