தமிழர்களின் அடுத்த தலைவர் சுமந்திரனா?

IMG 5094 1
IMG 5094 1

தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ளபோது, தமிழ் மக்களை தலைமை தாங்கப்போவது சுமந்திரனா என்பதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு கட்சி அலுவலகத்தை இன்றைய நாள் (5) திறந்து வைத்த பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இப்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள அரச தலைவர், தான் சிங்கள மக்களால் தெரிவுசெய்யப்பட்டேன் என்றும், எனவே அதற்கு தான் கடமைப்பட்டுள்ளதாகவும், ஆகையால் பெரும்பாண்மை இனத்தவர்களின் ஆணைகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

சில வேளைகளில் பெரும்பாண்மை இனத்தவர்கள் அவருக்கொரு ஆணையை வழங்கியிருக்கலாம், ஆனால் அதே சமயம் வடகிழக்கிலுள்ள மற்றொரு தேசிய இனமான, தமிழ்த் தேசிய இனம் என்பது இன்னுமொரு ஆணையைக் கொடுத்திருக்கின்றது.

எமது இனம், மொழி, நிலம் என்பன காப்பாற்றப்பட வேண்டும், எமக்கான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும், அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும், நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் இதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆகவே ஒட்டுமொத்தமான நாட்டினுடைய அரச தலைவர் எனச் சொல்லக்கூடிய ஒருவர், வெறுமனே சிங்கள மக்கள் கொடுத்த ஆணையினை மாத்திரமல்ல, அவருக்கு எதிராக இருந்தாலும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும் அவர் பரிசீலிக்க வேண்டும்.

இந்த நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்குமான அரச தலைவராக அவர் இருந்தால், அவர் இவ்வாறான விடயங்களை நிராகரிக்க முடியாது.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் வருகின்ற அரசுகள், இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை இருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்கின்றனர். பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக குழுக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுக்களால் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டாலும், எந்த சிங்களத் தலைமைக்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திராணியோ, பக்குவமோ கிடையாது. அதனைப் போட்டு மிதித்து இல்லாமல் செய்கின்ற போக்கைத்தான் நாம் தொடர்ச்சியாக பார்க்கக்கூடியதாகவுள்ளது.

தற்போது வந்திருக்கக்கூடிய கோட்டாபயவின் தலைமை என்பது, எல்லாவற்றினையும் நிராகரித்ததுடன், தற்போது பிரச்சினை என்று எதுவும் கிடையாது, அபிவிருத்தி செய்தால் போதுமானது அந்த அபிவிருத்தியை நாம் செய்வோமென்று கூறுகின்றார்.

வட, கிழக்கு போரில் பாதிக்கப்பட்ட மாகாணங்கள், இங்கு பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இங்குள்ள மக்களுக்கள் பெருமளவானோர் வாழ்வாதார தேவையுடைவர்களாகவும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகவும் காணப்படுகின்றனர்.

இதற்காவது அவர்களிடம் சரியான திட்டங்கள் இருக்கின்றதா, அபிவிருத்தியைப் பற்றிப் பேசினால், அதற்கு முன்பாக அவற்றுக்கான திட்டங்கள் இருக்க வேண்டும். இன்று வரையில் அபிவிருத்திகளுக்கான திட்டங்களையும் வெளியிட்டவர்களாக இவர்கள் இல்லை. ஆனால் தாம் அபிவிருத்தி செய்வோம் என்று கூறுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேட்டால் காணாமல் போனோர், காணாமல் போனோர்தான், ஆகவே அவர்கள் காணாமல் போனோர் தொடர்பில் அக்கறை எடுப்பதற்குத் தயாராக இல்லை.

யுத்தத்தில் இரு தரப்பினருக்கிடையில் யுத்தம் இடம்பெறும் போது, அதில் இறந்தவர்கள் காணாமல் போயிருக்கலாம். இது தற்போதைய அரச தலைவரினுடைய கருத்தாக இருக்கின்றது.

ஆனால் நாங்கள் யாரும் அதைப்பற்றிப் பேசவில்லை, நாங்கள் அவர்களிடம் கையளிகப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள், பொதுமக்களுக்கு முன்பாக கடத்தப்பட்டிருக்கக்கூடிய இருபதினாயிரம் பேருக்கும் மேற்பட்டோரைப் பற்றிப் பேசுகின்றோம். உண்மையான, நேர்மையான அரசாங்கம் என்றால் அவர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றம் அனுப்பினாலும், சிவசக்தி ஆனந்தனைத் தவிர ஏனைய 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதைச் செய்தார்கள். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், ஆளும் கட்சிக்கு துணையாக அவர்கள் செயற்பட்டனர்.

இவ்வாறு அரசுடன் இணைந்து செயற்பட்ட போது, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் எவ்வளவு சதவீதமான பிரச்சினைகளை கையாண்டிருக்கின்றீர்கள். எவ்வளவு தீர்வுகளை நீங்கள் எட்டியிருக்கின்றீர்கள். எதிர்த் தரப்பில் இருந்து எதிர்த்துக் கொண்டிருந்தால் பிரச்சினையில்லை, ஆனால் அவர்கள் ஆளுங்கட்சி வீழ்ச்சியடையாது பாதுகாத்தார்கள்.

கடந்த ஆட்சியில் ரணில் ஒரு புறமும் மைத்திரி மறுபுறம் ஓர் கயிறிளுவைப் போட்டிக்குப் போய் தங்களுடைய பிரச்சினைகளைப் பார்த்தார்களே தவிர, தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை.

ஆனாலும் மைத்திரி மற்றும் ரணில் ஆகிய இரு தரப்பினரையும் ஒரே மேசையில் அமர்த்தி இந்த அரசியல் சாசனத்தினை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

கடந்த ரணில் அரசாங்கம் கவிழ்ந்த போது, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் சுமந்திரன், ஆனால் வழக்கு தொடர வேண்டியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே, எனினும் ஜனநாயகத்திற்கு பாதிப்பு எனவே வழக்குத் தொடரப்பட்டதாக சம்பந்தன் சொன்னார். இவ்வாறு ஜனாநாயகத்தினை காப்பாற்றுகின்றோம் என்று சொல்கின்றவர்கள், மாறாக தமிழ் மக்களுக்கு எதைச் செய்தார்கள்.

அரசியல் சாசனத்தினை ஒருபுறம் வைத்தாலும்கூட, தற்போது தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற, அரசியல் கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்புகள் என பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளையாவது தீர்த்து வைத்திருக்கலாம்.

ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியைச் சேர்ந்த, ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல கோரிக்கையை எம்மிடம் முன்வவைக்கும் என்று பயந்தேன் என தெரிவித்தார். ஆனால் அவர்கள் எதனையும் முன்வைக்கவில்லை என்று கூறியதாக அறிந்தேன். எனவே இவ்வாறனதொரு தலைமையினைத்தான் நாம் கொண்டிருக்கின்றோம். இவ்வாறானதொரு தலைமையினைத்தான் இதுவரையில் நாம் வைத்திருக்கின்றோம்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் அரசாங்கத்தினைக் காப்பாற்றினார்கள்,

எமக்கு விரோதமான வரவு செலவுத் திட்டங்களை சம்பந்தன் ஆதரித்தார், வரவுசெலவுத்திட்டத்தை ஆதரிக்காதுவிட்டால்அரசு கவிழும் நிலை இருந்தது எனவே அரசை பாதுகாப்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

தற்போது மீண்டும் ஒரு தேர்தல் வரப்போகின்றது, அதற்கான ஆசனப் பங்கீடுகளைச் செய்து முடித்திருக்கின்றனர். மீண்டும் எமது பலத்தினை எமது மக்களுக்கு நிரூபிப்போம் என்று கூறப்போகின்றனர். பலத்தை நிரூபித்து இதுவரையில் எதைச் செய்தார்கள், எதுவும் செய்யவில்லை.

இதுவரைகாலமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செய்தவற்றை ஒரு பட்டியலிட்டு காட்டட்டும், அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்து அபிவிருத்தியில், அரசியல் ரீதியாக எவ்வளவு விடயங்கள் செய்யப்பட்டன, மக்களுக்கு இருந்த நெருக்கடியிலிருந்து எவ்வளவிற்கு காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். இதை அவர்கள் சொல்வார்களானால் அது சரியாகவிருக்கும். ஆனால் அவர்களால் அவ்வாறு பட்டியலிட முடியாது.

முன்பு சுமந்திரன் யாழில் இடம்பெற்ற ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் ஒருவிடயத்தினைச் கூறினார். இந்த அரசியல் சாசனம் வராவிட்டால் தன்னுடைய பதவினைத் துறப்பதாக கூறினார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

தற்போது இந்த அரசுடனும் அரசியல் சாசனம் தொடர்பில் பேசவேண்டி ஏற்படும் என்று கூறுகின்றார்.

இவ்வாறு அவர் தனது சட்டத் திறமைகளை தமிழ் மக்களுக்கு காட்ட முயல்கின்றார். அவர் ஒரு பிரபல சட்டத்தரணி, ஆனால் அவர் சிறந்த தலைவர் இல்லை.

தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ள போது, தமிழ் மக்களை தலமை தாங்கப்போவது சுமந்திரனா என்பதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேணடும்.

அவ்வாறான மோசமான நிலை தோன்றுமானால் தமிழ் மக்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுவர். ஐக்கிய தேசியக் கட்சியினுடைய முகவராகச் செயற்படக்கூடி சுமந்திரன், தமிழ் மக்களுக்குத் தலமை தாங்குவதாக இருந்தால் அவர்களுடைய பிரச்சினை எங்கேபோய் முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேணடும்.

ஆகவே மாற்றம் ஒன்று அவசியம், இதே நிலையில் நாம் தொடர்ந்தும் பயணப்பட முடியாது. அந்த மாற்றம் உருவாக்கப்பட வேண்டும். அந்த மாற்றத்தினூடாக சரியான தலமைகள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அந்தத் தலைமைகள் போராட்டத்தின் வலியை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தொடர்ந்தும் நாம் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தால் தமிழ் மக்கள் பாரிய பின்னடைவிற்குள் சென்று விடுவார்கள்.

இன்று தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள விடயம், தமிழ் தேசியமாகும்.அந்த தேசியம் என்ற விடயத்தினையும் தமிழ் மக்களிடமிருந்து அகற்றிவிட வேண்டும் என்பதில் சுமந்திரன் உறுதியாக இருக்கன்றார்.

எனவே கட்டாயமாக ஒரு மாற்றம் தேவை, அந்த மாற்றத்திற்காக, கடந்த இரு வருடங்களாக நாங்கள் முயற்சித்து வருகின்றோம்.

அந்த அடிப்படையில்தான் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கின்றார். தமிழ் மக்கள் கூட்டணி, எங்களது கட்சி, இன்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பலர் இணைந்து ஒரு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கி இருக்கியிருக்கின்றோம். வருகின்ற நாட்களில் அது அனைவருக்கும் அறிவிக்கப்படும்.” என தெரிவித்தார்.