கருணாவால் நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் – எச்சரிக்கிறது கூட்டமைப்பு

kodiswaran
kodiswaran

கருணா குழுவோடு ஒரு கூட்டம் இயங்குகின்றது அந்த கூட்டம் இந்த நாட்டின் இறைமைக்கு ஒரு காலத்தில் அச்சுறுத்தலாக அமைவார்கள். கருணா குழுவோடு சேர்ந்து இயங்கும் நபர்களால் இந்த நாட்டில் பாரிய பயங்கரம் ஏற்படும். இவர்களால் இந்த நாடு சின்னாபின்னமாகி போகும் அப்படியான செயற்பாட்டாளர்களை இந்த அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணா தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு கோட்டாபய அரசாங்கத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தாவது,

“கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் விடயத்தில் கடந்த ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கமானது முஸ்லிம் காங்கிரஸின் சொல்லுக்கு அடிபணிந்து செயற்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்திலே பலதரப்பட்ட போராட்டங்களையும் உண்ணாவிரத போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தோம்.இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி அரசால் கடைசியாக எங்களது தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். இப்போது ஆட்சிபீடம் ஏறிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் எமது மக்களை ஏமாற்றி வருகின்றது.

இன்று அம்பாறை மாவட்டத்திற்கு வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணா பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்திற்கு என்ன செய்திருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசியிருக்கிறாரா? ஒரு நாளாவது கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்திக் கொடுக்கவேண்டியது குறித்து பேசியிருக்கிறாரா? அந்த நேரம் வாய்மூடி மௌனியாக இருந்தவர் தற்போது அம்பாறை மாவட்டத்தில் மக்களை சிதைத்து சின்னாபின்னமாக்க முற்படுகின்றார்.

விடுதலைப்புலிகளின் போராட்டத்தை சீரழித்து கொத்துக் கொத்தாக எங்களது தமிழ் மக்களை கொன்று குவித்தவர் .பல ஆட்கடத்தல்கள் மேற்கொண்டவர் வெள்ளை வான் கடத்தல் சிறுபிள்ளைகளை போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக பிடித்து சென்றவர் அவ்வாறான கருணா எங்களுக்கு வந்து அபிவிருத்தி செய்வதா? கருணா அமைச்சராக இருக்கும் போதும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை.

உன்னிச்சை குளத்தில் இருந்து ரவூப் ஹக்கீமோடு இணைந்து முஸ்லிம்களுக்கு குடிதண்ணீரை வழங்கி வைத்தார். அதாவுல்லாஹ்வோடு இணைந்து காத்தான்குடிக்கு தண்ணீரை பெற்று கொடுத்தார். அந்த நேரம் உன்னிச்சையில் இருக்கும் 17 தமிழ் கிராமங்களுக்கு குடிதண்ணீர் கொடுக்கப்படவில்லை. அப்போது அதனை கண்மூடி முஸ்லிம்களுக்கு ஜாடை போட்டுக்கொண்டு இருந்தவர்தான் இந்த கருணா என்பதனை மறந்து விடக்கூடாது.

எங்களது தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அலிசாஹிர் மௌலானா உடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை உடைத்தவர் என்பதை தமிழ் மக்கள் மறந்து விடவில்லை. அவ்வாறான ஒருத்தர் இங்கே வந்து முஸ்லீம்களைப் பற்றி கதைக்கின்றார் .

மட்டக்களப்பிலே முஸ்லிம்களோடு ஒற்றுமையாக இருக்கிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். கருணாவின் பின்னணியைப் பற்றி அவரின் ஊரில் போய் கேட்டுப் பாருங்கள். அந்த மக்களின் மனநிலையை வெற்றி கொள்ள முடியாத ஒருத்தர் அம்பாறையில் களமிறங்க தொடங்கியிருக்கிறார்.

கருணாவை நம்பிச் சென்ற வியாழேந்திரனுக்கு அமைச்சர் பதவி எடுத்துக் கொடுக்க முடியாதவர் இன்று எங்களது மாவட்டத்திற்கு அமைச்சு பதவி எடுத்துக் கொடுக்க போகின்றாரா?

இப்போது அமைச்சு பதவி தருவதாக என்னை அழைக்கின்றார் . இவர் நல்ல ஒரு தியாகி, ஒரு தேச பற்றாளனா இவர் என்னை அழைக்க . கொலைகாரனையும் கொள்ளை காரனையும் நம்பி எங்களது மக்களை விற்றுவிட முடியுமா?

தமிழினத்தை காட்டி கொடுத்த துரோகிகளின் பின்னால் தமிழ் மக்கள் ஒருபோதும் செல்ல வேண்டாம். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்த கருணாவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது.

தமிழர்களின் வாக்கு பலத்தை குறைப்பதற்காக பேரினவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கருணா களமிறங்கப்பட்டிருக்கின்றார். பிரிந்து நின்று செற்பட்டு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க போகின்றார்.” என்றார்.