மக்களை கூறுபோட முயலும் கருணா – கோடீஸ்வரன் குற்றச்சாட்டு

kodeeswaran
kodeeswaran

பேரினவாத சக்திகளின் கைகூலிகளாக செயற்படுகின்ற கருணா அம்பாறை தமிழ் மக்களை கூறுபோட களமிறங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நேற்றைய நாள் (10) இதனை தெரிவித்தார்.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தான் பொறுப்பில் வகிக்கும் போது செய்யாத அபிவிருத்தி திட்டங்களை தற்போது செய்வதற்கான புளுகு கதைகளை கூறி தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்.

முன்னாள் கருணா குழுவோடு இயங்கியவர்களை தேடிப்பிடித்து பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இவர்களின் வேலைத்திட்டங்கள் மீண்டும் இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டமாகவே நான் பார்க்கின்றேன்.

கடந்த காலங்களிலே பல கடத்தல்களையும், கொள்ளைகளையும், கொலைகளையும் செய்த நபர்கள் உள்வாங்கி மீண்டும் இந்த நாட்டிலே ஒரு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்த முனைகின்றார்.

இப்படியான குழுக்கள் மீண்டும் இந்த நாட்டில் உருவாகுவதை தடுக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் இந்த அரசு இருக்கின்றது.

இவ்வாறான நபர்கள் வெவ்வேறு வகைகளில் மாயாஜால வித்தை காட்டி அம்பாறை மாவட்டத்தில் உள்நுழைய பார்க்கின்றனர். இவர்களுக்கு தகுந்த பாடத்தை தமிழ் மக்கள் புகட்ட வேண்டும்.

நாங்கள் நினைத்திருந்தால் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சு பதவியை பெற்றிருக்க முடியும் ஆயினும் எமது மக்களின் ஆணைக்கு ஏற்ப செயற்பட்டோம் என தெரிவித்தார்.