மயக்கம் வேண்டாம் – ஆதிக் குடிகள் தமிழரே – இந்தியாவில் வைத்து மீண்டும் இடித்துரைத்த விக்கி

IMG 20200111 WA0013
IMG 20200111 WA0013

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழரே. அதில் எந்தவித மயக்கமும் இருக்கத் தேவையில்லை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் திருநாள் விழா உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (11-01-2020) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

தற்போது ஒரு புதிய அரசியல்ப் பிரமுகர் இலங்கையில் ஜனாதிபதியாக பரிணமித்துள்ளார். அவரின் தற்போதைய அரசியல் போக்கு இலங்கைத் தமிழ் மக்களின் வருங்கால மேம்பட்ட நல்வாழ்வுக்கு எந்தளவுக்கு சாதகபாதகமாக அமையக்கூடும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் எமது பிரச்சினை பற்றி மிகச் சுருக்கமாக ஒரு சில வார்த்தைகள் கூறுவது எமக்கும் உதவும், நீங்களும் தெரிந்து வைத்திருந்தால் எங்கள் சார்பில் உங்களுக்கும் உதவும் என்று நம்புகின்றேன்.

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழரே. அதில் எந்தவித மயக்கமும் இருக்கத் தேவையில்லை. எமது ஆதிக்குடிகள் நாகர்களாகவும் இயக்கர்களாகவும் இருந்தார்கள். நாகர்கள் நாக வழிபாட்டில் ஈடுபட்டதால் நாகர்கள் எனப்பட்டனர். இயக்கர்கள் இயற்கையை ஆவிகளாகவும் தேவதைகளாகவும் வழிபாட்டார்கள். வேடர்கள் எனப்படுபவர்கள் ஆதித் திராவிடர்கள். இலங்கையில் நெடுங்காலமாக இருந்து வந்தவர்கள். சிங்களவர்கள் எனக் கூறப்படுபவர்களும் ஆதித் திராவிடக்குடிகளில் இருந்து வந்தவர்களே. அண்மைய DNA பரீட்சைகள் அவர்களைத் திராவிடர்கள் என்றே குறிப்பிடுகின்றன. தமிழ் பேசியோரும் அதே திராவிட வம்சத்தவர்களே எனப்படுகின்றது.

மேலும் சிங்களமொழி கி.பி.6ம் 7ம்; நூற்றாண்டுகளில்த் தான் வழக்கிற்கு வந்தது. அதற்கு முன்னர் சிங்களமொழி பேசுபவர்கள் இருக்கவில்லை. அப்படியிருக்க சிங்கள அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் கடந்த 100 வருடங்களில் பிழையான ஒரு கருத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். ஆரியர்களாள சிங்களவரே இலங்கையின் ஆதிக்குடிகள் என்றும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சோழர் காலத்து வந்தேறுகுடிகளே தமிழர்கள் என்றும் கூறிவருகின்றார்கள். இதனைக் கேள்விக்குட்படுத்த எமது தமிழ் சரித்திரப் பேராசிரியர்கள் ஏதோ காரணங்களுக்காக இதுவரையில் முன்வரவில்லை. தேவதூதர்கள் அடிவைக்க மறுக்கும் இடங்களுள் உள்நுழைய முட்டாள்கள் முன்வருவார்கள் என்றது போல் நான் இவற்றைக் கேள்விக்கு உட்படுத்தி சிங்கள புத்தி ஜீவிகளைச் சிந்திக்கச் செய்து கொண்டிருக்கின்றேன். ஓரளவு சிங்கள புத்திஜீவிகளை உசுப்பேத்தி வருகின்றேன்.

அண்மைய ஆதிகால சாட்சியங்களின் படி 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது புத்தர் காலத்திற்கு முன்னதாகவே தமிழரின் நாகரிகம் இலங்கையில் பரவி இருந்ததற்கான ஆதாரங்கள் வெளி வந்துள்ளன. இதுபற்றி அண்மையில் எமது சிரேஷ்ட சரித்திரப் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் பத்மநாதன் அவர்களுடன் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடியிருந்தேன். இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கையானது சிங்கள பௌத்த மக்களின்  நாடு என்றும், தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வந்தேறு குடிகள் என்றும் அவர்களுக்கென்று எந்த உரிமைகளும் தரத்தேவையில்லை என்ற கருத்தை இலங்கை சுதந்திரம் அடைந்த காலந் தொடக்கம் அப்பாவி சிங்களமக்கள் மனதில் சிங்கள  அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் விதைத்து  வந்துள்ளனர்.

இதனை மனதில் ஏற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று கூறுவதில் உறுதியாகவுள்ளார். ஒருவேளை விரைவில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற அவர் அவ்வாறு கூறி வருகின்றாரோ நாம் அறியோம்.

இவ்வாறான ஒரு எண்ணத்திலேயே நாட்டை ஆள்பவர் இருக்கின்றார் என்ற செய்தி பெரும்பான்மை சிங்கள மக்களையும் முக்கியமாக பௌத்த பிக்குகளையும் மனமகிழ்வடையச் செய்துள்ளது. மீண்டும் ஒரு கலவரம் 1958, 1977 மேலும் 1983ல் வந்தது போல் இனியும் வருமோ என்ற பயத்தில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். சென்ற ஏப்ரல் 21 ம் திகதியன்று தடம்புரண்ட சில இஸ்லாமியர்களால் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல்கள் இஸ்லாமிய சகோதரர்களையும் மனக்கிலேசத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆகவே இலங்கையில் தமிழ்ப் பேசும் இனம் இன்று மிக மோசமான ஒரு சூழலை எதிர் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இராணுவ நிலைகளை அதிகரித்தல், அவற்றைச் சுற்றி பௌத்த விகாரைகளையும், சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட எமது வழிபாட்டுத் தலங்கள், மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கடல் நீரியல் திணைக்களம், கனிமவியல் திணைக்களம், கமத்தொழில் திணைக்களம், உல்லாசப் பயணத் துறை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச சமூகம் வெளிப்பார்வையில் கண்டுகொள்ள முடியாத நுட்பமான இவ்வாறான வழிமுறைகளைக் கையாண்டு எமது வாழ்வியல், பொருளாதார, பண்பாட்டு அடையாளங்களை சிதைத்து வருவதுடன் தமிழ் மக்களின் வளங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது அரசு.

கட்டமைக்கப்பட்ட சிங்களப் பேரினவாதத்தினால் கன்னியாவில், தென்னமரவாடியில், பழைய செம்மலையில், வெடுக்குநாறி மலையில், நாவற்குழியில் என தமிழர் நிலமெங்கும் தீவிரப்படுத்தப்படும் ஆக்கிரமிப்புக்கள் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான இனவழிப்பு நிகழ்ச்சி நிரலை உறுதி செய்து நிற்கின்றன.

தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கான நீதியையும் அவை மீள நிகழாமைக்கான உறுதிப்பாட்டையும் வேண்டி சர்வதேசத்தின் முன்னிலையில் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை தமிழ் மக்களை திருப்திப்படுத்தாத தீர்மானங்களை தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் மத்தியிலும் முன்வைத்து அதனை  நடைமுறைப்படுத்தக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகளாக நான்காண்டு கால அவகாசத்தை வழங்கியிருந்தும், அதனைக்கூட கிஞ்சித்தும் மதிக்காத இலங்கை அரசு மாறாக சர்வதேச சமூகத்திற்கே சவால் விடும் வகையில் போர்க் குற்றவாளிகளையே மிக உயர் பதவிகளுக்கு நியமித்து வருகின்றது. இதன் உச்சமாக அண்மையில் நடந்த இராணுவத் தளபதியின் நியமனத்தைக் காணலாம். இன்று பல முக்கியமான அரச பதவிகளுக்கு முன்னர் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டு ஆதாரங்களோடு இலங்கை இராணுவத்தினர் சர்வதேச நிறுவனங்களினால் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டிருக்கின்ற போதும், இன்று வரை ஒருவர் கூட கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவோ இல்லை என்பதிலிருந்து இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை மீது நாம் நம்பிக்கை கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. இந்நிலையில்தான் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை கோரி நிற்கின்றோம். 

இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பு போர்க்குற்றஙக்ள் சம்பந்தமாகப் பொறுப்புக் கூறத் தயாரில்லை. எனவே பன்னாட்டு விசாரணையைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இதனைச் சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். எமது உலகளாவிய உறவுகளான நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டு காலத்தின் பின்னரும் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளவரை அரசியற் கைதிகளுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒரு கருவியாகக் கையாண்டு தமிழ் சிவில் எதிர்ப்புக்களை – தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை அரசு அச்சுறுத்தி வருகின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அண்மைய கைது இவ்வச்சுறுத்தல்களின் ஒரு அலகு.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் எமது மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுகிறார்கள் என்பதற்கு போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக காத்திருப்பது வெளிப்படையான எடுத்துக்காட்டாகும். சிங்கள இளைஞர்களின் 1971ம் ஆண்டின் ஜே.வி.பி கிளர்ச்சியின் பின்னர் அவர்களுடைய போராளிகள் எதுவித நிபந்தனைகளுக்கும் அப்பால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள். மாறாக தமிழ் இளைஞர்கள் போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் நீதியான விசாரணைகள் ஏதுமின்றி சந்தேகத்தின் பேரில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யப்படும் போதுதான் இலங்கை அரசானது நீதி, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் பற்றிப் பேசமுடியும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 1000 நாட்களைக் கடந்து விட்டது. அதற்கான தீர்வு எதுவும் கிடைக்கப் பெறவில்லை. பதிலாக அப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் நோக்குடன் அரசாங்கம் காணமல் போனார் அலுவலகங்கள் என்னும் போர்வையில்; அலுவலகங்களைத் திறந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 6000 ரூபா தருவதாக கூறுகின்றனர். காணமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தமது சொந்தங்களுக்காக நீதி கேட்டு மட்டுமே போராடுகின்றார்களே தவிர நிவராணங்களுக்காக அல்ல.

குறிப்பாக வட்டுவாகல் மற்றும் ஓமந்தைச் சோதனைச் சாவடிகளில் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோரும், வாழ்க்கைத் துணைகளும், சகோதரரர்களும், உறவினர்களும் இன்றும் கண்கண்ட சாட்சிகளாக இருக்க, அவர்களுடைய சாட்சியங்களின் அடிப்படையில் உண்மைகளைக் கண்டறிந்து இப்பிரச்சினைக்கு நீதியான தீர்வினை வழங்குவதற்கு மறுத்து வருகின்ற இலங்கை அரசாங்கம் தற்போது காணாமல் போனோர் அலுவலகங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சர்வதேச சமூகத்தினையும் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது.

இலங்கை அரசானது இராணுவ மயமாக்கலின் ஊடாக தொடர்ந்தும் தமிழ் மக்களது காணிகளைச் சுவீகரித்து வைத்திருப்பதன் மூலம் உல்லாச விடுதிகள், விவசாயப் பண்ணைகள், இதர வர்த்தக நடவடிக்கைகளைத் தாமே மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதுடன் தொடர்ந்தும் பொதுச்சேவை நிர்வாக விடயங்களிலும் தலையீடு செய்து வருகின்றது.

படைத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்களால் எமது பிரதேசக் கடல் வளங்கள் அபகரிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மீனவர்கள் வடகிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதுடன், வாடிகளை அமைத்து தமிழ் மீனவர்களது வாழ்வாதாரங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் எமது மீனவர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறவேண்டிய சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாக எமது கடல் வளம் சிதைக்கப்படுகின்றது. இவையாவும் அரச பாதுகாப்புத் தரப்பினரின்; ஊக்குவிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கில் சில துறைமுக அபிவிருத்தி திட்ட முன்னெடுப்புக்கள் தமிழருக்கான அபிவிருத்திகளாக காட்டப்பட்டாலும் அது உண்மையில் தென்னிலங்கை மீனவர்களுக்கான பாதுகாப்பான தரிப்பிடங்களுக்காகவே அமைக்கப்படுகின்றன. அங்கு தென்னிலங்கை மீனவர்களின் அதிக பிரசன்னமும் அவர்களுக்கான படைத்தரப்பினரின் ஒத்துழைப்பும் உள்;ர் தமிழ் மீனவர்களின் தொழிலைப் பாதிப்பதுடன் தமிழர் தமது சொந்த வாழ்விடங்களிலேயே தாழ்வு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது பாராம்பரிய வாழ்விடங்களில் குடியமர முடியாத நிலை இன்னமும் தொடர்கின்றது. அக் காணிகளை கடந்த 10 வருடங்களாக படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள்.

வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலே தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணையையும், பாதுகாப்பையும் வழங்குவதினூடாக இலங்கை இராணுவம் தமிழர்களின் இருப்பினை மலினப்படுத்துகின்றது.

இந் நிலையிலேயே எம்மக்கள்; தாமாகவே பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம், கிழக்கிலும் வடக்கிலும் முன்னெடுக்கப்படும் காணமால் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், தமிழ் அரசியற் கைதிகள் விடுதலைக்கான போராட்டம், நீராவியடிப் பிள்ளையார் கோவில் போராட்டம், கன்னியா வெந்நீரூற்றுப் போராட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச  செயலகத்தை தரமுயர்துவதற்கான போராட்டம் என தமது அன்றாடக் கோரிக்ககைகள் தொடக்கம் அரசியல் விடயங்களையும் முன்வைத்து போராட்டங்களை மக்கள் தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றனர்.

இவ்வாறு இன்று பொது மக்கள் தலைமையேற்றிருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை மேலும் வலுவாக்கி, இருக்கக் கூடிய சர்வதேச நிலைமைகளையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, சிறீலங்கா அரசின் அப்பட்டமான இனவழிப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பேசவும், அதனை எதிர்க்கவும், தடுக்கவும,; போர்க்குற்றங்கள் மற்றும் தமிழ் இனவழிப்பு மீதான சர்வதேச விசாரணையை கொண்டு நடாத்த அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் நாம் மீண்டும் மீண்டும் தேசமாய் திரட்சி பெற வேண்டியுள்ளது. இனவழிப்பு என்பது ஒரு கடுமையான சொல்லென்று சிலர் கூறுகின்றார்கள். எமது சனத்தொகை கடந்த காலங்களில் வெகுவாகக் குறைந்து கொண்டு போவதை நாம் அவதானித்தால் உண்மை புரியும். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொகை கடந்த 50 வருடங்களில் அரைவாசி ஆகியுள்ளது.

மேலும்; தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு என்பது அவர்களை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அமைந்தாலே ஒழிய எமது பாதுகாப்புக்கு இடமில்லை என்பதை தொடர்ச்சியான வரலாறும் தொடரும் நிலைமைகளும் மீண்டும் மீண்டும் இடித்துரைத்து நிற்கின்றன. அந்த வகையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வுத் திட்ட முயற்சியும் பிரிக்கப்பட முடியாத வடக்குக் கிழக்குத் தாயகத்தில் தமிழ்த் தேசத்தை உறுதிப்படுத்துவது, அதனுடைய இறைமை அங்கீகரிக்கப்படுவது, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டித் தீர்வை அமைப்பது போன்ற விதத்திலேயே அமைய வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்திற்கும் எமது வெளிநாட்டு உறவுகளுக்கும் கூறிவைக்கின்றேன்.

நாங்கள் எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் நாங்கள் எமது தனித்துவத்துடன் பாதுகாப்பாக எம் இன விருத்திக்காக வாழ வேண்டும் என்றால் மேற்கூறிய அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நாங்கள் எமது வருங்காலம் முன்னைய பாகிஸ்தான் போன்று வல்லாட்சியில் அமிழ்ந்து விட்டால் தமிழர்களுக்கு என்ன நடக்கும் என்ற கவலை ஏற்கனவே மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது.

நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான தடங்களை தேடவேண்டிய நிலையே ஏற்படப்போகின்றது என்று எண்ண வேண்டியுள்ளது. பறங்கியருக்கு இது ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் “தமிழ்” என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து எமக்காக  குரல்கொடுப்பதுடன் உரிய செயற்பாடுகளில் இறங்கவேண்டும். எமது மக்களின் உரிமைகளை உறுதி செய்யவேண்டிய உணர்வு மற்றும் அறம் சார்ந்த தார்மீக கடப்பாட்டை நீங்கள் யாவரும் கொண்டிருக்கின்றீர்கள்.  நாங்கள் வேறு நீங்கள் வேறு அல்ல. எமது பிரச்சினையை உங்கள் பிரச்சினையாகக் கருதுங்கள்.’ என்றார்