நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஊடகத்தில் பதியப்பட்ட அவதூறுப் பதிவு பலரது எதிர்ப்பினை அடுத்து நீக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகள் பெறும் போட்டியில், தனது கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்மீது அவதூறு பரப்பும் விதமாக நாடாமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஊடகத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.
அப்பதிவில் தமிழரசுக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் சுமந்திரன் 15கோடி இலஞ்சம் கேட்டதாகவும் குற்றஞ்சாட்டிப்பட்டிருந்தது. இந்தப் பதிவை மேற்கோள்காட்டி தமிழ்க் குரலும் செய்தி வெளியிட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் அப்பதிவில் சாதிய பிரதேச வாதங்களைக் கிளறும் விதமான விடயங்கள் கையாளப்பட்டிருந்தன. குறிப்பிட்ட விடயம் தொடர்பாக தமிழ்க்குரல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ‘சாதி, பிரதேசவாத அரசியலை நிறுத்துங்கள் ‘ என்றுகோரி பகிரங்க மடல் ஒன்றை நேற்று (11-01-2019) வெளியிட்டிருந்தது .
சொந்த அரசியல் இலாபங்களுக்காக அவதூறுகளை அள்ளிவீசி சமூகத்தில் பிரிவினைகளை உருவாக்கும் விதமாக எழுதப்பட்ட இப்பதிவானது சமூக மட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பல தரப்புகளிலிருந்து எழுப்பப்பட்ட எதிர்ப்பலைகளுக்குப் பணிந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தரப்பினர் தமது இணையத்திலிருந்து குறிப்பிட்ட பதிவை நீக்கியுள்ளனர்.