கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவும்!

1 china
1 china

சீன புத்தாண்டு காலம் ஆரம்பமாகவுள்ளதால் அந்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக இலங்கைக்கு வருகை தருவார்கள் ஆகவே  சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாகவும் சபையில் எச்சரிக்கை விடுத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த வைரஸ் இலங்கைக்குள் பரவாத வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.


நாடாளுமன்றத்தில் இன்று 27/2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து, சீனாவில் சில நகர் பகுதிகளில் தீவிரமாக பரவிவரும் கொரோனே வைரஸ் தொடர்பாக அறிவித்தல் விடுத்த போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார். 


எமது நாட்டில் சில காலத்திற்கு முன்னர் சார்ஸ் மற்றும் மேர்ஸ் என்ற வைரஸ் பரவியது. இந்நிலையில் தற்போது கொரோனா என்ற வைரஸ் காரணமாக சீனாவில் இரண்டு நகரங்கள் முற்றாக முடங்கியுள்ளது.

தற்போது சீனாவில் குறித்த வைரஸ் பரவியுள்ள நிலையில் சீன புத்தாண்டு காலத்தையொட்டியதாக சீன சுற்றுலா பயணிகள் எமது நாட்டுக்கு பெருமளவுக்கு வரலாம்.


இதனால் இந்த விடயம் தொடர்பாக அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.