கிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த கர்ப்பவதி உயிரிழப்பு!

Domestic Gun Misfire 14 Yr Old Dead
Domestic Gun Misfire 14 Yr Old Dead

கிளிநொச்சியில் கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் வயது தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களைக் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 

சம்புக்குளம் கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் கர்ப்பவதி ஒருவர் நேற்றைய தினம் (02-03-2020) காலையிலிருந்து கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இருப்பினும் அது சிறுநீர் தொற்று காரணமாக ஏற்பட்ட வயிற்று வலி என எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை. 

இந்நிலையில் பிற்பகல் திடீரென மயங்கி விழுந்தவரை தருமபுரம் வைத்தியசாலையில் சேர்ப்பித்தபோது அவரது இதயம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது. தருமபுர வைத்தியசாலை ஊழியர்களால் கடுமையாக முயற்சித்து இதயத்தை மீள இயங்க வைத்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட  குறித்த தாய்க்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அதிக இரத்தப்போக்கு காரணமாக அங்கு அவர் உயிரிழந்தார்.

இவரது கர்ப்பமானது கர்ப்பப்பைக்கு வெளியே தங்கியதால் வயிற்றறையில் ஏற்பட்ட திடீர் இரத்தப்போக்கே இந்த மரணத்திற்குக் காரணம் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் 2007ம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது கர்ப்பகால மரணம் இது என்பதால் முழு வைத்தியசாலையும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

கர்ப்ப காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, தலைசுற்றல் முதலிய எந்த ஒரு அறிகுறிகளையும் கர்ப்பவதிகள் சாதாரணமாக எடுக்காமல் உடனடியாக தமது பகுதி குடும்ப நல உத்தியோத்தர்களிடம் தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று ஆலோசனை பெற்றோ கர்ப்பகாலங்களில் ஏற்படக்கூடிய இவ்வாறான அபாய நிலைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.