விகாராதிபதியின் உடலை வைத்து அரசியல் நாடகம்- பிரதமர் கவலை

Ranil Wickremesinghe
Ranil Wickremesinghe

முல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை அடாத்தாக நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கும்போது

“நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு தரப்பினர் பௌத்த பிக்குகள் சிலரை தமது அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள். இந்த அரசியல் நாடகம்தான் முல்லைத்தீவு – நீராவியடியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இறந்த விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், அதனை மீறி – நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்த மாதிரி பௌத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.

கொழும்பிலிருந்து சென்ற பிக்குகள் தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் இன, மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இடத்தில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்துள்ளார்கள்.

இந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒரு தரப்பினர் இயக்குகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.”

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்ட வகையில் இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இது தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.