ஏமாற்றிய கோட்டாவுக்குப் பாடம் புகட்ட எம்மை ஆட்சிப்பீடத்தில் ஏற்றிவிடுங்கள்! – சஜித் ஆவேசம்

sajith
sajith

“வேலையற்ற பட்டதாரிகளை கோட்டாபய அரசு ஏமாற்றி இருக்கின்றது. நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் எனத் தெரிந்தே அரசு நாடாளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நியமனக் கடிதங்களை அனுப்பியிருந்தது. அரசு வாக்குறுதியளித்த காலத்துக்குள் நியமனம் வழங்கியிருந்தால் தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்தியிருக்கமாட்டார்.”இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் அனைத்து பட்டதாரிகளுக்கும் மூன்று மாதங்களுக்குள் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்குவேன்” எனவும் அவர் உறுதியளித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசீமின் இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஆட்சியமைத்து ஒரு மாதத்துக்குள் வேலையற்ற பட்டதாரிகளை அரச துறையில் உள்வாங்கி, மூன்று மாதங்களுக்குள் நிரந்தர நியமனம் வழங்குவேன் என ஜனாதிபதித் தேர்தலின்போது நான் வாக்குறுதியளித்திருந்தேன். ஆனால், எனது எதிர்வாதி கோட்டாபய, பட்டதாரிகளை ஒரு மாதத்துக்குள் இணைத்துக்கொள்வதாக வாக்குறுதியளித்திருந்தார். பின்னர் ஜனவரியில் நியமனம் வழங்குவதாகத் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் பெப்ரவரியில் வழங்குவதாகக் கூறியிருந்தார். இறுதியில் நாடாளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சிலருக்கு அவசரமாக நியமனக் கடிதங்கள் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நியமனங்கள் வழங்குவது, இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும். அதனடிப்படையிலே பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்குவதை தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் இடைநிறுத்தி இருக்கின்றார்.

அத்துடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதியை அரசு ஏற்கனவே அறிந்திருந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் என தெரிந்துகொண்டே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அரசு 44 ஆயிரம் பட்டதாரிகளையும் ஏமாற்றி இருக்கின்றது.

அத்துடன், பட்டதாரிகளுக்கான நியமனத்தை இடைநிறுத்த நானே செயற்பட்டதாக அரசு பொய்ப் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றது” – என்றார்.