இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை – ஜனாதிபதி

11 1
11 1

“இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனோர் தொடர்பில் மறந்து முன்னோக்கிச் செல்வதே சிறந்தது.”இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, இராணுவத்தைச் சேர்ந்த பெருந்திரளானோரும் காணாமல்போயுள்ளனர்.

இதன்படி, காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையொன்று நாட்டில் உள்ளது. அந்தப் பிரச்சினையை அனைத்துத் தரப்பினரும் மறந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

போர் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தாக்குதல்களுக்கு இலக்காகி, உயிரிழந்தவர்களே காணாமல்போனோர் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்” – என்றார்.

இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போயுள்ளதாகவே காணாமல்போனோரின் உறவினர்கள் கூறி வருவதாகத் தெரிவித்திருந்தனர்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, “இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் காணாமல்போகவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டவர்களே காணாமல்போயுள்ளமை யுனிசெப் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போர்க்காலத்தில் காணாமல்போயுள்ளனர்.

போரில் உயிரிழந்து, சடலங்கள் கிடைக்காதவர்களே இந்தக் காணாமல்போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

போர்க்களம் தொடர்பான புரிந்துணர்வு இல்லாதவர்களே, இவ்வாறான பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர்.

காணாமல்போயுள்ளதாக கூறிக் கொள்ளும் சிலர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், காணாமல்போனோர் விவகாரத்தை மறந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதுவே சிறந்தது.

காணாமல்போனமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க முடியும்” – என்றார்.

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, “பிரகீத் எக்னெலிகொட உயிரிழந்திருக்கும் பட்சத்தில் அவருக்கும் மரண சான்றிதழை வழங்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

இலங்கையைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் தாம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் ஊடாகவே அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழர்கள் முதலில் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டே போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர் என்று கூறிய ஜனாதிபதி, பின்னர் அந்தப் போராட்டங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களுக்கும், அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில், பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.