தமிழ் தேசிய கூட்டமைப்பில் அகத்தேசிய முற்போக்கு கழகத்தை அங்கத்துவ கட்சியாக இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும்,
அகத்தேசிய முற்போக்கு கழகத்தின் தலைவருமான எம்.பி.நடராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா பண்டாரிக்குளத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஓன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அகதேசிய முற்போக்கு கழகமானது நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலே சுயேட்சைக் குழுவாக போட்டியிட தீர்மானித்துள்ளது.
வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களின் உரிமை, சுதந்திரம் அவற்றோடு தமிழ் மக்களின் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு சுயேட்சையாக போட்டியிட்டு ஆசனங்களை பெற்று அமையப்போகும் அரசாங்கத்தோடு பேரம் பேசலினூடாக அபிவிருத்தி திட்டங்களை பெற்று மக்களுக்கு கையளிப்பதே எமது முக்கியமான நோக்கம்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தபோதும் அரசியல் ரீதியான அங்கிகாரம் எனக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அகதேசிய முற்போக்கு கழகமானது அடிமட்ட மக்களின் அபிவிருத்தியினை மையமாகக் கொண்டு அவர்களுடைய தேவைகள் பிரச்சனைகளை இனங்கண்டு உரிய இடங்களுக்கு கொண்டு சென்று அந்த பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.