யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்பு அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

6 yh
6 yh

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இயங்கிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அலுவலகம், தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு அலுவலகத்தைத் திறந்திருந்தார். மாவட்ட செயலகத்தின் சொத்துக்களே அந்த அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருந்தன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் அந்த அலுவலகம் இயங்குவது தொடர்பில் ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தான். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனையடுத்து உடனடியாக அலுவலகத்தை மூடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும் நேற்று அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த விடயமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அலுவலகத்தை உடனடியாக மூடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்டச் செயலருக்கு அறிவுறுத்தியது. மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் அந்த அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டு மூடினர்.