கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 305 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று இராணுவம் அறிவித்துள்ளது.
வவுனியா – பம்பைமடு கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 167 பேர் இன்று அங்கிருந்து வௌியேறினர் என்று இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டை வந்தடைந்தவர்களே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனைத்தவிர, புனானை கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 78 பேரும், கல்கந்த கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 60 பேரும் கண்காணிப்பின் பின்னர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்று இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.