கொழும்பில் ‘கொரோனா’ தொற்று 55 ஆக அதிகரிப்பு

3 rr 2
3 rr 2

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், குருநாகல், கேகாலை, மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 38 பேரும், வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று பிற்பகல் ஒரு மணிவரை 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய 160 நோயாளர்களில் 84 பேர் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 41 பேர் வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையிலும், 20 பேர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும், 15 பேர் சிலாபம் – இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைவிட நாடளாவிய ரீதியில் 24 வைத்தியசாலைகளில் மேலும் 103 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.