முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள வசந்தநகர் பகுதியில் இன்று லண்டனில் உள்ள சிறி கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதி பங்களிப்புடன் மாதிரி பண்ணை ஒன்று திறந்து வைக்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த பண்ணையின் பெயர்ப்பலகையினை இயக்குனர் உள்ளிட்ட அதிதிகள் திறந்து வைத்தனர். தொடர்ந்து பண்ணையினை லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர் ஆகியோர் ஈழமண்ணினதும், தமிழினதும், ஈழத்து போராட்டம் தொடர்பிலும் உரையாற்றினர். அதேவேளை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா மற்றும் சிறிதரன் ஆகியோரும் உரையாற்றினர்.
நிகழ்வின் நிறைவில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவிப்பது தொடர்பிலும், தமிழ் மக்கள் பேரவையின் சுயாதின குழுவினால் முன்னெடுக்கப்படும் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாடு தொடர்பிலும் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.