இலங்கையில் இதுவரை காலமும் காணாத பாரிய மக்கள் பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய இந்த பேரணி எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.
சுமார் 3 இலட்சம் மக்களை உள்ளடக்கிய இந்த பேரணி ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களின் நம்பிக்கையையும் அவரது வெற்றியை உறுதி செய்யும் பேரணியாகவும் அமையும் என விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் 10ஆம் கொழும்பு – காலி முகத்திடலில் பாரிய மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது.
காலி முகத்திடலில் அதிகபட்சம் ஒன்றரை இலட்சம் மக்கள் மாத்திரமே ஒன்றிணைய முடியும். எனினும் எமது பேரணியில் சுமார் 3 இலட்சம் மக்கள் பங்குபற்றவுள்ளனர். எனவே காலி முகத்திடலுடன் அந்த பகுதியிலுள்ள பிரதான வீதியையும் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளோம்.
சஜித் மீதான மக்களின் நம்பிக்கையையும் அவரது வெற்றியையும் உறுதி செய்யும் இந்த பேரணியால் கொழும்பிலுள்ள மக்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதால் எமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.