நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அதன் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை குருணாகலில் நடைபெறவுள்ளது.
பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இன்று சனிக்கிழமை அநுராதபுர ஜய ஸ்ரீ மகா விகாரையில் மத வழிவாடுகளில் ஈடுபடவுள்ளார்கள்.
இதில் கலந்துகொண்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
முன்னணியின் பிரதமர் வேட்பாளராக குருணாகல் மாவட்டத்தில் இலக்கம் 17 இல் போட்டியிடும் மஹிந்த ராஜபக்சவினால் நாளை ஞாயிற்றுக்கிழமை குருணாகலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்ளைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லதொரு நாட்டை உருவாக்குவதே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டே தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள் மாத்திரமே பிரசாரக் கூட்டங்களில் பங்குப்பற்ற முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.