கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கிய மாணவர்கள் மற்றும் தொழில் வாய்ப்புக்காகச் சென்ற சுமார் (594) பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
அந்தவகையில் இன்று அதிகாலை தன்சானியாவின், தாருஸ் ஸலாம் நகரிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 1710 எனும் விசேட விமானத்தில் (289) இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மடகஸ்கார், மொசாம்பிக், உகாண்டா, கென்யா,ருவாண்டா ஆகிய ஆபிரிக்க நாடுகளில் ஹோட்டல் துறைகளில் தொழில் புரிந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பினர். இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான மற்றுமொரு விசேட விமானம் மூலம் மாலை தீவிலிருந்து (255) பேரும், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து மற்றுமொரு விமானம் மூலம் (50) பேரும் என சுமார் (594) இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.